சபரிமலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: 2 நாட்கள் பக்தர்களுக்குத் தடை; ஆன்லைன் முன்பதிவு ரத்து! Sabarimala Temple Closed for Devotees on Oct 21 and 22 Due to President Draupadi Murmu's Visit

நாளை (அக். 17) நடை திறப்பு; 21, 22 தேதிகளில் ஜனாதிபதி தரிசனத்திற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள்; பாரம்பரிய சடங்குகளைக் கடைப்பிடிக்க TDB உறுதி!

திருவனந்தபுரம்/சபரிமலை, அக்டோபர் 16: ஐப்பசி மாதப் பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (வெள்ளிக்கிழமை, அக். 17) திறக்கப்பட உள்ள நிலையில், ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான அக். 22-ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்யவுள்ளதைத் தொடர்ந்து, அக். 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதப் பூஜைத் தொடக்கம்:

ஐயப்பன் கோவில் நடை நாளை (அக். 17) மாலை 4 மணிக்குத் திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார். நாளை வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறாது.நாளை மறுநாள் (அக். 18) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். அக். 18 காலை 8 மணிக்குச் சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜனாதிபதி வருகையும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:

ஐப்பசி மாதப் பூஜையின் நிறைவு நாளான அக். 22-ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். அக். 21 அன்று திருவனந்தபுரம் வரும் அவர், அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

அக். 22 காலை 9 மணிக்குத் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வந்து, இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சன்னிதானத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் நிலக்கல் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் திரும்புகிறார்.

பக்தர்களுக்குத் தடை மற்றும் TDB-யின் உறுதி:

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகையையொட்டி, அக். 21 மற்றும் 22 ஆகிய 2 நாட்களுக்குப் பக்தர்களின் தரிசனத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களுக்கும் பக்தர்கள் செய்துள்ள ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருவாங்கூர் தேவசம் போர்டு (TDB), ஜனாதிபதி வருகையின்போது சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் உள்ள அனைத்து பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கேரள உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளது.

ஜனாதிபதி முர்மு அக். 22-ஆம் தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். அவர் அக். 24-ஆம் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk