கோவையில் திருமணம் செய்வதாக 'ஆசை வார்த்தை'; பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பணியாளர்' கைது!
கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஐ.டி. நிறுவனத்தின் பெண் உரிமையாளரிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி பணம் பறித்த முன்னாள் பணியாளர் ஒருவரை, சாய்பாபா காலனி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு இதே குற்றத்திற்காகச் சிறைக்குச் சென்று, பிணையில் வந்த குற்றவாளி மீண்டும் கைதாகியிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில், தனது சொந்தமாக ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 40 வயது பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது நிறுவனத்தில், பவானியைச் சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். ஆரம்பத்தில் மிகவும் நல்லவர்போல நடித்து, பெண் உரிமையாளரிடம் நல்ல பெயரை எடுத்த அருண்குமார், பின்னர் நிறுவனத்தில் பல முக்கியப் பணிகளைச் செய்யும் முக்கியஸ்தராக மாறினார்.
பெண் உரிமையாளரின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொண்ட அருண்குமார், அவரிடம் நெருக்கம் காட்டி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண்ணுடன், அருண்குமார் தனிமையைப் பயன்படுத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்தப் பெண் தனியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை வைத்து அவரிடம் பணம் பறிக்க ஆரம்பித்துள்ளார்.
நிலமை மோசமாகவே, கடந்த 2023 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அருண்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பிணையில் வெளியே வந்த அருண்குமார், தனது கேவலமான செயலை நிறுத்தவில்லை. சமீபத்தில், அந்தப் பெண்ணின் மின்னஞ்சல் முகவரிக்கு, அவர்களது நெருக்கமான ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி, மீண்டும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், பயந்துபோன அந்தப் பெண், கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அவசரமாகப் புகாரளித்தார். புகாரின் பேரில், அருண்குமாரை விசாரித்த போலீசார், அவர்மீது வழக்குப் பதிவு செய்து, நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம், சைபர் குற்றங்கள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.