சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு: மக்கள் வெள்ளத்தில் உற்சாகப் பயணம்!
சேலம்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சேலம் மாவட்டம் வந்தடைந்தார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திரண்டிருந்த திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பெரம்பள்ளம் முதல் மேட்டூர் வரையிலான 11 கி.மீ. தூர சாலைப் பேரணியில் முதலமைச்சர் பங்கேற்று மக்கள் வெள்ளத்தில் மிதந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் தனது சாலைப் பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர், இரவு 7.30 மணியளவில் மேட்டூர் அருகே உள்ள சேலம் மாவட்ட எல்லையான பெரம்பள்ளம் வந்தடைந்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள், முதலமைச்சரை மலர்தூவி வரவேற்றனர்.
பெரம்பள்ளத்தில் இருந்து முதலமைச்சர் நடந்தே சென்று சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை சந்தித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். சாலைப் பேரணியின் நடுவே தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, நவப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர், இரவு மேட்டூரில் தங்கினார்.
முதலமைச்சரின் நாளைய முக்கிய நிகழ்வுகள்:
நாளை (ஜூன் 12) காலை 9.30 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் தண்ணீர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, சேலத்தில் நடைபெறும் விழாவில், ₹1,244.28 கோடி மதிப்பிலான 509 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ₹200.26 கோடி மதிப்பிலான 225 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இறுதியாக, 1.01 லட்சம் பயனாளிகளுக்கு ₹204.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நாளை மாலை சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறார்.