ஒடிசா:
கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 290 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதனிடையே, ஒடிசா ரயில் கோர விபத்து தொடர்பான விசாரணையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) திங்களன்று சோரோ பிரிவு சிக்னல் ஜூனியர் இன்ஜினியர் (JE) வாடகை வீட்டிற்கு சீல் வைத்தது.
சோரோவில் உள்ள அன்னபூர்ணா ரைஸ் மில் அருகே உள்ள ஜூனியர் இன்ஜினியர் அமீர்கானின் வாடகை வீட்டிற்கு திங்கள்கிழமை சென்ற சிபிஐ குழு, வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டறிந்தது. பின்னர், அமீர்கானின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இரண்டு சிபிஐ அதிகாரிகளும் வீட்டைக் கண்காணித்து வருவதாக புலானாய்வு வட்டாரம் தெரிவித்தது. முன்னதாக, நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத இடத்தில் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இதுவரை 292 பயணிகளின் மரணத்திற்கு காரணமான பஹானாகாவில் நடந்த சோகமான விபத்திற்குப் பிறகு சிக்னல் ஜூனியர் இன்ஜினியர் JE மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்கலை இருந்து காணவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக பஹானாகா ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டிற்கும் சென்றனர்.
முன்னதாக, எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறுதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்த ரயில் விபத்து ஏற்பட காரணமானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். ரயில்வே சிக்னலைக் கட்டுப்படுத்த எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பயன்படுத்துகிறது. இது ஒரு பாதுகாப்பு அமைப்பு. ரயில்களின் பாதுகாப்பிற்காக சிக்னல்கள் மற்றும் சுவிட்சுகளுக்கு இடையிலான ஆபரேடிங் சிஸ்டம் அமைப்பை இது, கட்டுப்படுத்துகிறது. இந்த அமைப்பின் மூலம், ரயில்வே தடங்களில் ஓடும் ரயில்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், இதன் மூலம், ரெயில் யார்டின் பணிகள் கட்டுப்படுத்தப்பட்டு ரயில் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டு, ரயில் பாதுகாப்பாக ரயில் தடத்தை கடப்பதை உறுதி செய்கிறது.
ஒடிசா ரயில் விபத்தில் இது வரை 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் அடையாளம் காணப்படாத உடல்களை உறவினர்கள் அடையாளம் கண்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி இந்திய ரயில்வேத் துறை அறிவித்துள்ளது. அடையாளம் காண முடியாத உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ரயிவ்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் அனைத்து உறவினர்களும், மரணமடைந்தவர்களின் வாரிசுகளும் தாமாக முன்வந்து தங்களது மரபணு மாதிரிகளை அளித்து மரணமடைந்தவர்களுடன் தங்களின் உறவுகளை உறுதி செய்து அடையாளம் காண முடியாத உடல்களை பெற்றுக் கொள்ளும்படி ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.