கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை அருகே ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தது அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரை வழிமறித்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுனர் வாகனத்தை பின்னோக்கி ஓட்டினார் காட்டு யானை விடாமல் வாகனத்தை துரத்தி தந்தத்தால் குத்தி தும்பிக்கையால் தாக்கியது. உடனே சமயோசிதமாக செயல்பட்ட வாகன ஓட்டுநர் யானையின் பிடியில் சிக்காமல் காரை வேகமாக ஓட்டினார்.
காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அவ்வழியே வாகனத்தில் வந்தவர்கள் கோத்தகிரி நோக்கி முன்னோக்கி செல்லாமல் பாதி வழியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். மலைப்பாதை சாலை ஓரத்தில் உள்ள செடி கொடிகளை தின்ற பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் ஆடி அசைந்தபடி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.