சென்னை:
Jayakumar Blames DMK Government For ADMK Raid’s : அதிமுக பிரமுகர்களின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ஒரு பக்கம் பொதுக்குழு பிரச்சனை, மற்றொரு பக்கம் ரெய்டு பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில், ரெய்டு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
காலையில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உட்கட்சி உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள், நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கான தடை வழக்கு, பொதுக்குழு ஏற்பாடுகள் என சுறுசுறுப்புடன் இயங்கி வந்த அதிமுக பிரமுகர்களுக்கு மற்றொரு பிரச்சனையாக தற்போதைய ரெய்டு அமைந்துள்ளது. பரபரப்பான இக்கட்டான நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
பசுமை வழிசாலையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் சாரம்சங்களை மட்டும் பார்க்கலாம்.
‘மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். குடிநீர், சாலை, மின்சார வசதி, கழிவு நீர் செல்லக்கூடிய வசதி. அதுபோல அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவேண்டும். இந்த இரண்டு விஷயங்களைத்தான் மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கடந்த ஓராண்டு விடியா திமுக அரசு கவனம் செலுத்துவதில்லை’
‘தினமும் ரிப்பன் கட் செய்யும் பணியைத்தான் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறாரே தவிர, வேறு எந்தப் பணியும் செய்யவில்லை’
‘நீட் வரவே வராது. ஒரு கையெழுத்தில் இதனை முடித்துவிடுவோம் என்று சொன்னீர்கள். இதையும் முடிக்கவில்லை. இதுபோன்று 500 வாக்குறுதிகளைச் சொன்னீர்கள். மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை இந்த விடியா அரசு நிறைவேற்றவில்லை.’
‘மக்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு வழக்குப் போடவேண்டும் ,அதிமுகவை அழிக்கவேண்டும், முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்குப் போடவேண்டும், கழக முன்னோடிகள் மீது பொய் வழக்கு போடவேண்டும், இதுபோன்ற பணிகளைத்தான் இந்த ஒரு வருடமாக திமுக செய்து வருகிறது’
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நினைக்குமாம். அதுபோலத்தான் இந்த ரெய்டும். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் அம்மா மீது ஏகப்பட்ட வழக்குகள். அதேபோல 72 ல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கழகத்தை ஆரம்பிக்கும்போது எவ்வளவு அடக்குமுறைகள், தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாரன் இவர்கள் அனைவரும் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம். இப்படி அடக்குமுறைகளைத் தாண்டி,வழக்குகளை எல்லாம் தாண்டி, நீதிமன்றத்தை சந்தித்து ஒரு புடம் போட்ட தங்கமாக அதிமுக ஜொலித்தது’
‘அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜரை அசிங்கப்படுத்த வேண்டும், கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அவருடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு ரெய்டு நடத்தி களங்கம் கற்பிக்கவேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது’
‘அதிமுக என்பது அமுக்க முடியாத ஒரு பந்து. தண்ணீரில் பந்தை அமுக்க முடியுமா. அது மேலேதான் வரும். அதுபோல எத்தனை அடக்குமுறை வந்தாலும் சரி, நீதிமன்றத்தில் சந்திப்போம்.’
‘கழக முன்னோடிகள் மீது வழக்கு போட்டு அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தால், அது பூனை பகல் கனவு கண்டதுபோலத் தான் ஆகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் இதற்கு சரியான தீர்ப்பை வழங்குவார்கள்’
என்று ஜெயக்குமார் கூறினார்.
– நவீன் டேரியஸ்