நாய் குரைத்ததைக் கேட்டது ஒரு குத்தமா? - கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய கொடூரத்தை வீடியோ ஆதாரத்துடன் தட்டித் தூக்கிய போலீஸ்!
கள்ளக்குறிச்சி நகராட்சியில் நாய் குரைப்பது குறித்துக் கேள்வி கேட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர் மற்றும் அவரது மனைவியைத் திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிய சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
திமுக இளைஞரணி அமைப்பாளரும், 1-வது வார்டு கவுன்சிலருமான ‘பண்ணையார்’ ரமேஷின் ஆதரவாளர்கள், போதையின் உச்சத்தில் ஒரு முதியவர் என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டைகளால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆளுங்கட்சி பலத்தை வைத்துக்கொண்டு அண்டை வீட்டாருக்கே இந்த கதி என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி கள்ளக்குறிச்சி மக்களிடையே எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் வசித்து வருபவர் முருகேசன். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு, வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இவரது வீட்டிற்கு அருகிலேயே 1-வது வார்டு திமுக கவுன்சிலர் ‘பண்ணையார்’ ரமேஷ் வசித்து வருகிறார். ரமேஷின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் அடிக்கடி குரைப்பதாலும், அங்கு நிலவும் சத்தத்தாலும் உடல்நலம் குன்றிய முருகேசனால் இரவில் உறங்க முடியவில்லை. இது குறித்து அவர் ரமேஷிடம் முறையிட்டதுதான் வினையாக முடிந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் ரமேஷ், தனது ஆதரவாளர்களான சதீஷ் உட்பட 5 பேரைத் தூண்டிவிட்டுள்ளார். போதையில் இருந்த அந்தக் கும்பல், முருகேசனின் வீட்டிற்குள் புகுந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரையும், தடுக்க வந்த அவரது மனைவி ராதாவையும் உருட்டுக்கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது. கீழே விழுந்த முதியவரை வெறிகொண்டு மிதித்துத் தாக்கும் காட்சிகள் காண்போரை நெஞ்சுறைய வைத்துள்ளது. படுகாயமடைந்த முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஏரி மண் கடத்தல் புகாரில் சிக்கியிருந்த கவுன்சிலர் ரமேஷ், தற்போது ஒரு முதியவர் மீதான கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது. இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சதீஷ் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்; தப்பியோடிய கவுன்சிலர் உட்பட மற்றவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
.jpg)
