புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) விண்ணப்பங்களை இனி கூடுதல் பாதுகாப்புடன் தாக்கல் செய்யலாம். வரும் ஜூன் 16, 2025 முதல், அனைத்து RTI கோரிக்கைகளுக்கும் ஒருமுறைப் கடவுச்சொல் (OTP) மூலம் மின்னஞ்சல் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்டுள்ளது.
குடிமக்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், RTI இணையதளமான www.rtionline.gov.in இன் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த புதிய சரிபார்ப்பு முறையின் முக்கிய நோக்கம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
RTI ஆன்லைன் இணையதளம் வழியாக குடிமக்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம், மேல்முறையீடுகளைப் பதிவு செய்யலாம், மேலும் அவற்றின் தற்போதைய நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த நடைமுறை, இணையவழி RTI சேவைகளை இன்னும் நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்பான முறையிலும் பயன்படுத்த வழிவகுக்கும்.
"குடிமக்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இணையதளத்தின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், ஜூன் 16, 2025 திங்கட்கிழமை முதல் அனைத்து RTI கோரிக்கைகளுக்கும் OTP மூலம் மின்னஞ்சல் சரிபார்ப்பு செயல்படுத்தப்படும்" என DoPT இன் கட்டுப்பாட்டில் உள்ள அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, டிஜிட்டல் ஆளுகையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.