தேனி அருகே கர்ப்பிணி மனைவி, மகளை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை | A young man committed suicide after killing his pregnant wife and daughter near Theni

தேனி: தேனி அருகே கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதோடு கடிதம் ஒன்றையும் எழுதிவைத்ததாக தெரிகிறது.

தேனி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (35). இவரது மனைவி அஜிதா (33). மகள் பிரித்விகா (5). அஜிதா தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். இவர்கள் தேனி அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். சதீஷ்குமார் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் தனியாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஏதோ ஒரு மன வருத்தத்தில் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜிதாவின் குடும்பத்தினர் பலமுறை அஜிதா மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கு தொலைபேசி மூலமாக அழைத்துள்ளனர். பதிலளிக்காததால் இன்று (ஆக.23) காலை அஜிதாவின் தந்தை மற்றும் தம்பி ஆகியோர் நேரில் வந்தனர். பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு அஜிதா மற்றும் குழந்தை பிரித்திகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், சதீஷ்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தடைய அறிவியல் துறையினரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இதில் இந்த சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்திற்கும் மேல் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் போலீஸார் நடத்திய சோதனையில், சதீஷ்குமார் எழுதிய ஒரு கடிதமும் கிடைக்கப்பெற்றது. அதில் இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை என்றும்,அதனால் இறந்து விட முடிவு செய்ததாகவும், தான் இறந்த பின் மனைவியையும், குழந்தையையும் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாததால் அவர்களையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும், யாரும் தவறாக கருதக் வேண்டாம். அனைவரும் என்னை மன்னிக்கவும் என எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மூவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்குமார் ஏன் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்தார்? மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com