சாமியார் நித்யானந்தாவின் சிலைக்கு பூஜை செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் அவர் சமாதி நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். தனக்காக கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி பிரபலமடைந்த அவர், அங்கு சென்ற பிறகு தம்மை கடவுளின் மறுஅவதாரம் என கூறி தினம் தினம் புதிய கெட்டப்புகளில் தோன்றி பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
மேலும் கைலாசாவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வாருங்கள் மகிழ்ந்து வாழலாம் என்று எல்லாம் டைலாக்குகளை பதிவிட்டு போலீஸாருக்கு தண்ணீர் காட்டினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தான் இறக்கவில்லை என்றும், தற்போது சமாதி நிலையில் உள்ளதாகவும் கூறினார். மேலும் தனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் தன்னால் உணவு சாப்பிட முடியவில்லை என்றும் தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் மீண்டும் தகவல்கள் பரவின. இதற்கும் மறுப்பு தெரிவித்த நித்யானந்தா, ‘சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் நிலை. அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைத்துக்கொள்கிறது’ என்று கூறினார்.
இந்த நிலையில் நித்யானந்தாவை போன்ற தோற்றம் கொண்ட சிலைக்கு பூஜை மற்றும் ஆராதனை செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அவரது பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்து மதத்தில் உயிருடன் இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் மரபு இல்லை. இந்த சூழலில் நிதயானந்தாவின் சிலைக்கு பூஜை செய்வதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகியிருப்பது ஒருவேலை அவர் ஜீவசமாதி ஆகிவிட்டாரா என சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் இந்த புகைப்படங்கள் தொடர்பாக அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கைலாசா நாட்டில் நித்யானந்தேஸ்வரர் எனும் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளதாகவும், சித்திரை நட்சத்திர உற்சவம் அன்று அந்த கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– Arunachalam Parthiban