நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராசிபுரம் அடுத்த ஏகே சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக தகவலின் பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது தாறுமாறாக வந்த லாரியும் சென்டர் மீடியனில் மோதி நின்றது.பின்னர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த டூரிஸ்ட் வேன் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே புதுச்சத்திரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் ராசிபுரம் முதல்நிலைக் காவலர் தேவராஜன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 2 காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் உட்பட 4 பேரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பார் சாய் சரண் தேஜஸ்வி நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், விபத்து குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினர் விபத்தில் பலியான சம்பவம் காவல் துறையினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
– Gowtham Natarajan