சென்னை:
திமுக இளைஞரணி செயலாளாரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் துணை முதல்வராக ஆக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயநிதி சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகியும் பரம்பரை பரம்பரையாக கலைஞர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பழக்கமான குடும்பத்தினராக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
திமுகவில் இருந்து முதல் குரல்
அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும் அனைத்து அமைச்சர்களும் தலைவரைப் போலவே வணங்கிச் செல்லும் அளவிலேயே உதயநிதி கருதப்படுகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வர வேண்டும் என்றும், அவரது திறமையை ஒரு தொகுதியில் மட்டும் சுருக்கி விடக்கூடாது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவரும் , அவருக்கு உள்ள திறமைகளும் பயன்பட வேண்டும் என்பதால் அவரை அமைச்சராக வேண்டும் என முதல் குரல் எழுப்பினார்.
இரண்டாவது குரல் எழுப்பிய அமைச்சர்
இந்த நிலையில் அதே போல அமைச்சர் சிவசங்கர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வில் பேசும்போது , மூன்று முரை எம்.எல்.ஏ.வாக இருக்கும் தன்னால் கூட மக்கள் பணி செய்ய முடியவில்லை என்றும், சேப்பாக்கம் தொகுதியைக் உதயநிதி ஸ்டாலின் தரம் உயர்த்துவார் என்றும், ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரை அமைச்சராக வேண்டுமென இரண்டாவது குரல் எழுப்பினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி..!
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் மட்டுமல்ல துணை முதலமைச்சராகவும் ஆக்க வேண்டும் என மீண்டும் குரல் எழுந்துள்ளது.இந்த முறை பேசியுள்ளது திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன். முதலில் ரஜினி உடன் கட்சி தொடங்குவதாக பயணம் மேற்கொண்ட ராஜன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது .
ஸ்டாலின் வழியில் உதயநிதி
இதனிடையே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கருணாநிதி, மு .க.ஸ்டாலின் என இருவரையும் பார்த்து வளர்ந்ததால் இருவரது ஆற்றலையும் வயதிலேயே வாங்கியவர் உதயநிதி என்றும், ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு மக்களோடு இருக்கும் நெருக்கம் கட்சி தொண்டர்களிடையே இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திமுகவினருக்கே ஆச்சரியம்
இளம் தலைமுறையினர் மத்தியில் மதவாத சிந்தனைகளை வெறுத்து சமத்துவ சிந்தனையை வளர்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ள ராஜன், எல்லா மக்களும் விரும்பும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதை பொருத்தமானதாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார். திமுகவினர் உதயநிதியை அமைச்சராக வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் இருந்த ஆர்.எஸ்.ராஜன் உதயநிதியை துணை முதலமைச்சராக வேண்டும் என கூறியுள்ளது திமுகவினரை மட்டுமல்ல அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது