சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இரண்டு நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அந்த கடிதத்தில், “மத்திய அரசு மாணவர்கள் தாய்மொழி உட்படப் பல மொழிகளைக் கற்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020, மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவிப்பதை முழுமையாக ஆதரிக்கிறது. நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள குழந்தைகளும் புதிய கல்விக் கொள்கையின் நன்மைகள் சென்றுசேர வேண்டும் என உறுதியாக இருக்கிறது.” என எழுதியுள்ளார்.